செய்திகள்
கோப்புப்படம்

மந்தாரக்குப்பத்தில் வியாபாரிகள் கடைகள் அடைப்பு

Published On 2020-02-17 17:27 IST   |   Update On 2020-02-17 17:27:00 IST
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை எதிர்த்து சென்னையில் போராடியவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதை கண்டித்து கடலூர் மாவட்டம் மந்தாரக்குப்பத்தில் வியாபாரிகள் கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மந்தாரக்குப்பம்:

சென்னை வண்ணாரப்பேட்டையில் முஸ்லிம்கள் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி போராட்டம் செய்தனர். அப்போது அவர்கள் சாலை மறியல் செய்ய முயற்சித்த போது போலீசார் அவர்களை தடியடி நடத்தி கலைத்தனர்.

இந்தசம்பவம் தமிழக முழுவதும் எதிரொலித்தது. போலீஸ் தடியடி சம்பவத்தை கண்டித்து முஸ்லிம்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டம் இன்று 3-வது நாளாக நீடித்தது.

முஸ்லிம்களுக்கு ஆதரவாக தி.மு.க. கூட்டணி கட்சியினரும் போராட்டத்தில் குதித்து உள்ளனர். இதேபோல் வியாபார சங்கத்தினரும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

கடலூர் மாவட்டம் மந்தாரக்குப்பத்தில் வியாபாரிகள் சங்கத்தினர், தி.மு.க. கூட்டணி கட்சியினர் இன்று (17-ந் தேதி) ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்து இருந்தனர்.

அதன்படி இன்று வியாபாரிகள் மந்தாரக்குப்பத்தில் கடையடைப்பு போராட்டம் செய்தனர். பெரியாக்குறிச்சியில் இருந்து மந்தாரக்குப்பம் வரை சுமார் 500-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகள் முழுவதும் இன்று மூடப்பட்டு இருந்தது. இதனால் அந்த பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.

மந்தாரக்குப்பத்தில் உள்ள ஜெயப்ரியா பஸ் நிறுத்தம் பகுதியில் இன்று முஸ்லிம் அமைப்பினர் தொடர் முழக்க போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் ஏராளமான முஸ்லிம் பெண்களும் பங்கேற்றனர்.

Similar News