செய்திகள்
கொள்ளை

பல்லாவரம் அருகே மூதாட்டியிடம் நூதன முறையில் நகை கொள்ளை

Published On 2020-02-11 09:30 GMT   |   Update On 2020-02-11 09:30 GMT
பல்லாவரம் அருகே மூதாட்டியிடம் நூதன முறையில் 5 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாம்பரம்:

பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் சரஸ்வதி (70). இவர் பல்லாவரத்தில் உள்ள மகளை பார்த்துவிட்டு பஸ் மூலம் மீண்டும் அனகாபுத்தூர் வந்தார். பின்னர் அவர் அம்பேத்கார் சாலை பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்தார்.

அப்போது ஆட்டோவில் இருந்த ஒரு கும்பல் அவரை வழிமறித்து தாங்கள் செல்லும் பகுதியில் கலவரம் நடக்கிறது. எனவே கழுத்து மற்றும் காதுகளில் அணிந்திருந்த தங்க நகைகளை பையில் வைத்துக்கொள்ளும்படி தெரிவித்தனர்.

இதை நம்பிய மூதாட்டி சரஸ்வதி தான் அணிந்திருந்த 5 சவரன் நகைகளை மர்ம நபர்களிடம் கொடுத்தார். அவர்கள் நகைகளை ஒரு பேப்பரில் மடித்து சரஸ்வதி வைத்திருந்த பையில் வைத்து அனுப்பினர்.

சரஸ்வதி சிறிது தூரம் சென்றதும் எந்தவித கலவரமும் நடக்காதது கண்டு தனது நகைகளை போட்டுக்கொள்ளலாம் என்று எண்ணி பார்த்தார். அப்போது மர்மநபர் மடித்து கொடுத்த பேப்பரில் நகைகள் இல்லை. அதனை அவர்கள் நூதன முறையில் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரிந்தது.

இதுகுறித்து சரஸ்வதி சங்கர்நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News