திருக்கழுக்குன்றத்தில் ஆள் மாறாட்டம் செய்து ரூ. 2 கோடி நிலம் விற்பனை: வக்கீல்-காவலாளி கைது
காஞ்சிபுரம்:
திருக்கழுக்குன்றம் அருகே உள்ள வல்லிபுரம் கிராமத்தில் குஜராத்தை பூர்வீகமாக கொண்டவர் சோனாலிசா என்பவருக்கு 10 ஏக்கர் நிலம் உள்ளது. அதற்கு காவலாளியாக விஜயகுமார் என்பவரை நியமித்து பராமரித்து வந்தார்.
இந்த நிலையில் செய்யாறு அருகே உள்ள வட்டம் ராந்தம் பகுதியை சேர்ந்த வக்கீல் பெருமாள் என்பவர் திருக்கழுக்குன்ற பத்திரப்பதிவு அலுவலகத்தில் போலியான நபரை சோனாலிசா என்று அடையாளம் காட்டி 10 ஏக்கர் நிலத்தை விற்பனை செய்து விட்டார்.
இதனை அறிந்த சோனலிசா அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து காஞ்சிபுரம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார்.
நில அபகரிப்பு பிரிவு டி.எஸ்.பி. அலெக்சாண்டர் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் அன்புசெல்வி விசாரணை நடத்திய போது சோனலிசாவின் 10 ஏக்கர் நிலத்தை ஆள் மாறாட்டம் செய்து பலருக்கு ரூ. 2 கோடி வரை விற்பனை செய்து இருப்பது தெரிந்தது.
இதையடுத்து வக்கீல் பெருமாள் அவருக்கு உடந்தையாக இருந்த காவலாளி விஜயகுமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
கைதான வக்கீல் பெருமாள் ஏற்கனவே கடந்த 2015-ம் ஆண்டு ரெட்டியாப்பா ரெட்டி என்பவரின் 7.5 ஏக்கர் நிலத்தையும், 2017-ல் சேகர் என்பவரின் 2.5 ஏக்கர் நிலத்தையும், பாலு என்பவரின் 3.5 ஏக்கர் நிலத்தையும் மோசடி செய்ததாக சிறைக்கு சென்று வந்தவர்.