செய்திகள்
காரில் ஏசி இயங்காததால் தகராறு- டிரைவரை தாக்கிய வாலிபர்கள் கைது
காரில் ஏசி இயங்காததால் ஏற்பட்ட தகராறில் டிரைவரை தாக்கிய வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலந்தூர்:
அனகாபுத்தூரை சேர்ந்தவர் லோகநாதன் (32). வாடகை கார் டிரைவர். இவர் 2-ந்தேதி கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் இருந்து 3 வாலிபர்களை கோவிலம்பாக்கத்துக்கு சவாரி ஏற்றிச் சென்றார்.
அப்போது காரில் ஏ.சி. இல்லாததால் வாலிபர்கள் டிரைவரிடம் தகராறு செய்து அவரை தாக்கிவிட்டு தப்பி ஓடினர். இதுதொடர்பாக லோகநாதனுடன் பணியாற்றிய சக கார் டிரைவர்கள் 200 பேர் பரங்கிமலை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். போலீஸ் விசாரணையில் லோகநாதனை தாக்கியது செங்கல்பட்டை சேர்ந்த பிரித்வி, பழவந்தாங்கலை சேர்ந்த ரஞ்சித், கோவிலம் பாக்கத்தைச் சேர்ந்த ஆல்டோ என்பது தெரிய வந்தது. இதில் பிரித்வி, ரஞ்சித் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக ஆல்டோவை தேடி வருகிறார்கள்.