வேதாரண்யம் அருகே சாலை தடுப்புக்கட்டையில் கார் மோதி ஒருவர் பலி
வேதாரண்யம்:
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள திருநள்ளாறு சனீஸ்வரபகவான் கோவிலுக்கு நேற்று பேராவூரணியை சேர்ந்த கோபால் என்பவர் 6 பேருடன் காரில் சென்றுள்ளனர்.
பின்னர் அங்கிருந்து வேளாங்கண்ணிக்கு சென்றுவிட்டு இரவு மீண்டும் நாகை-திருத்துறைப்பூண்டி தேசிய நெடுஞ்சாலையில் பேராவூரணிக்கு வந்து கொண்டிருந்தனர்.அப்போது தலைஞாயிறு அருகே ஓடச்சேரி என்ற இடத்தில் கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை மீறி தாறுமாறாக ஓடி சாலையின் தடுப்புக்கட்டையில் மோதியது. இதனை கண்ட அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கிய காரில் இருந்தவர்களை மீட்டனர். இதில் கோபால் சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.காயமடைந்த 5 பேரை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இதுகுறித்து தலைஞாயிறு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபாஸ்சந்திரபோஸ் விசாரணை நடத்தி வருகிறார்.