செய்திகள்
கொலை

மது குடித்தபோது தகராறு- வாலிபர் வெட்டி படுகொலை

Published On 2020-01-28 10:05 GMT   |   Update On 2020-01-28 10:05 GMT
மது குடித்தபோது தகராறில் வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு:

ஈரோடு கருங்கல்பாளையம் கே.எஸ்.நகர் பகுதியில் வாய்க்கால் ஓரம் உள்ள ஒரு வயல் வெளியில் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

இது பற்றி தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு கருங்கல்பாளையம் போலீசார் விரைந்து சென்று அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டனர்.

அருகே மது பாட்டிலும் கிடந்தது. இதனால் அங்கு நண்பர்கள் மது குடித்து ஜாலியாக இருந்தபோது அவர்கள் இடையே ஏற்பட்ட வாய் தகராறில் அந்த வாலிபர் வெட்டியும், குத்தியும் கொலை செய்யப்பட்டிருப்பதாக போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

மேலும் போலீசாரின் அடுத்தக்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட வாலிபர் ஈரோடு சூரம்பட்டிவலசு பகுதியை சேர்ந்த நாகராஜ் (வயது 22) கூலித்தொழிலாளி என தெரிய வந்தது. பிறகு அந்த வாலிபர் உடல் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இன்று (செவ்வாய்க்கிழமை) அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் வாலிபர் நாகராஜை கொலை செய்த கொலையாளிகளைப் பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

ஈரோடு டவுன் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜீ தலைமையில் கருங்கல்பாளையம் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் சங்கர், ரவி ஆகிய 3 பேர் தலைமையில் இந்த 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுஉள்ளது.

இந்த தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் அதிரடி விசாரணை நடத்தி வருகிறார்கள். விரைவில் கொலையாளிகளை பிடிப்போம் என தனிப்படையினர் தெரிவித்தனர்.

கொலை செய்யப்பட்ட நாகராஜ் உடல் வைக்கப்பட்டிருந்த ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் உறவினர்கள் கண்ணீருடன் இருந்தனர்.

பிரேத பரிசோதனைக்குப் பிறகு உடல் ஒப்படைக்கப்பட்ட போது உறவினர்கள் கதறி அழுதனர்.

Tags:    

Similar News