ஆதம்பாக்கத்தில் மாணவர்களை குறிவைத்து போதை மாத்திரை விற்ற கணவன்-மனைவி கைது
ஆலந்தூர்:
ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகர் பகுதியில் மாணவர்கள் மற்றும் வாலிபர்களை குறி வைத்து போதை மாத்திரை விற்பதாக ஆதம்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டார். அப்போது அதே பகுதி 3-வது தெருவில் சுகுமார் என்பவர் வீட்டில் போதை மாத்திரை விற்கப்படுவது தெரிந்தது. போலீசார் விரைந்து சென்று போதை மாத்திரை விற்ற சுகுமார், அவரது மனைவி வசந்தி மற்றும் பக்கத்து வீட்டை சேர்ந்த ஜீவரத்தினம் ஆகியோரை கைது செய்தனர்.
அவர்கள் கொடுத்த தகவலின்படி போதை மாத்திரை விற்க மூளையாக செயல்பட்ட அதே பகுதியை சேர்ந்த பவுல்ராஜ், இளங்கோ மற்றும் 18 வயதுக்குட்பட்ட இரண்டு சிறுவர்கள் ஆகியோரும் சிக்கினர்.
அவர்களிடம் இருந்து 120 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றை ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து அவர்கள் வாங்கி வந்து விற்று வந்தது விசாரணையில் தெரியவந்தது.
10 மாத்திரைகள் கொண்ட அட்டையை ரூ. 300-க்கு வாங்கி வந்து இங்கு ஒரு மாத்திரை ரூ. 300-க்கு விற்றுள்ளனர். இந்த மாத்திரையை மாணவர்களும், இளைஞர்களும் தண்ணீரில் கலக்கி ஊசி மூலம் உடலில் செலுத்தி வந்தனர்.
இதன் மூலம் ஏற்படும் போதை 2 நாட்களுக்கு இருந்துள்ளது. போதை மாத்திரை விற்றதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
கைதான சுகுமார் மற்றும் அவரது மனைவி வசந்தி உள்பட 5 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறுவர்கள் 2 பேர் செங்கல்பட்டில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.