குடியாத்தத்தில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் தற்கொலை
குடியாத்தம்:
குடியாத்தம் டவுன் சங்கம் நகர், அடுத்த திரு.வி.க நகரை சேர்ந்தவர் விக்னேஷ் நகை தொழிலாளி இவரது மனைவி ஓவியா (20). இவர்களுக்கு கடந்த ஆண்டு ஜீன் மாதம் திருமணம் நடந்தது. திருமணமாகி 7 மாதங்களாகியும் கர்ப்பமடையவில்லை என்ற ஏக்கத்தில் ஓவியா இருந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று மாலை வீட்டில் தனியாக இருந்த ஓவியா தனக்கு குழந்தை பாக்கியம் இல்லாததால் தற்கொலை செய்து கொள்வதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு விஷம் குடித்து மயங்கி கிடந்தார். ஓவியா மயங்கி கிடப்பதை கண்ட உறவினர்கள் அவரை மீட்டு குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஓவியா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த குடியாத்தம் டி.எஸ்.பி சரவணன், மற்றும் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஓவியா எழுதி வைத்திருந்த கடிதத்தை கைபற்றி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஓவியாவிற்கு திருமணமாகி 7 மாதமே ஆனதால் உதவி கலெக்டர் கணேஷ் விசாரணை நடத்தி வருகின்றார்.