அரசு பஸ் மீது கார் மோதல்- தனியார் நிறுவன அதிகாரி மனைவி பலி
கவுந்தப்பாடி:
கவுந்தப்பாடி ஈரோடு மெயின்ரோட்டில் செட்டிபாளையம் அருகே அரசு பஸ்சும் கார்ரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் மூதாட்டி பலியானார். இருவர் படுகாயம் அடைந்தனர்.
கோபி சீதாலட்சுமி புரத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற தனியார் நிறுவன அதிகாரி சிங்காரம் (86) அவரது மனைவி திரிபுரசுந்தரி (80) இவர்கள் இருவரும் ஈரோட்டுக்கு வங்கி வேலையாக காரில் கோபியில் இருந்து புறப்பட்டனர்.
காரை கோபிநாத் (48) என்பர் ஓட்டினார். டிரைவர் சீட் அருகே சிங்காரம் அமர்ந்து வந்தார். ஈரோடு சென்று வங்கி வேலைகளை முடித்து விட்டு கோபி நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனர்.
கார் கவுந்தப்பாடியை நோக்கி வந்து கொண்டிருந்தபோது டிரைவர் முன்னால் சென்ற வாகனத்தை முந்தி சென்ற போது எதிரில் வந்த அரசு பஸ் மீது கார் நேருக்கு நேர் மோதி அப்பளம் போல் நொறுங்கியது.
காரில் பயணம் செய்த திரிபுரசுந்தரி சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்த டிரைவர் கோபிநாத், சிங்காரம் ஆகியோரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இந்த விபத்து குறித்து கவுந்தப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.