கவுந்தப்பாடி அருகே சாலை விபத்தில் தனியார் கம்பெனி மேலாளர் பலி
கவுந்தபாடி:
கவுந்தப்பாடி பழனிச்சாமி வீதியைச் சேர்ந்தவர் ருக்விதின். தராசு வியாபாரி. இவரது மகன் நிஷாந்த் (வயது29). இவரது மனைவி மசுதாபானு. இவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. நிஷாந்த் தனியார் கம்பெனியில் மேலாளராக வேலை பார்த்து வந்தார்.
நேற்று இரவு நிஷாந்தும் அவரது நண்பருமான கவுந்தபாடி ஜே.ஜே.நகரைச் சேர்ந்த கீர்த்திவாசன் (வயது 26). வேலை விஷயமாக மோட்டார் சைக்கிளில் பெருந்துறைக்கு சென்றுவிட்டு பின்னர் மீண்டும் இரவு 11.30 மணி அளவில் கவுந்தப்பாடிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். வண்டியை நிஷாந்த் ஓட்ட கீர்த்திவாசன் பின்னால் உட்கார்ந்து வந்து கொண்டிருந்தார்.
வண்டி கவுந்தப்பாடி இ.ஐ.டி. பிரிவு அருகே வந்தபோது மோட்டார்சைக்கிள் திடீரென நிலைதடுமாறி அந்த பகுதியில் இருந்த ஒரு வீட்டின் காம்பவுண்ட் சுவர் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டு தலையில் படுகாயமடைந்த நிஷாந்த் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவரது நண்பர் கீர்த்திவாசனுக்கும் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து அந்த வழியாக வந்தவர்கள் கவுந்தபாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயமடைந்த கீர்த்தி வாசனை மீட்டு சிகிச்சைக்காக கவுந்தப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
நிஷாந்த் உடல் பிரேத பரிசோதனைக்காக கவுந்தப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.