செய்திகள்
லஞ்ச புகார் எதிரொலி - ஆலந்தூர் வருவாய் அதிகாரி ‘சஸ்பெண்டு’
லஞ்ச புகார் எதிரொலியாக ஆலந்தூர் மண்டல உதவி வருவாய் அதிகாரி பாலசுப்பிரமணியன் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஆலந்தூர்:
சென்னை பெருநகர மாநகராட்சியின் 12-வது மண்டலமாக ஆலந்தூர் உள்ளது.
இங்கு உதவி வருவாய் அதிகாரியாக பணிபுரிபவர் பாலசுப்பிரமணியன். இவர் லஞ்சம் பெற்றுக்கொண்டு கட்டிடங்கள், ஓட்டல்கள், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு வரியை குறைத்து விட்டதாக புகார் கூறப்பட்டது.
இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் கடந்த வாரம் பாலசுப்பிரமணியத்திடம் விசாரணை செய்தனர். புகார்கள் குறித்து விளக்கம் கேட்டனர்.
இதையடுத்து, விசாரணை அறிக்கையை, லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சென்னை மாநகராட்சி ஆணையரிடம் அளித்தனர். அதன் அடிப்படையில் ஆலந்தூர் மண்டல உதவி வருவாய் அதிகாரி பாலசுப்பிரமணியன் தற்காலிக பணி நீக்கம் (சஸ்பெண்டு) செய்யப்பட்டுள்ளார்.
இதற்கான உத்தரவை சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பிறப்பித்துள்ளார்.