செய்திகள்
நாகையில் குடிசை வீடு தீப்பிடித்து சேதம்
நாகையில் குடிசை வீடு தீப்பிடித்து சேதம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகை காடம்பாடி சவேரியார் கோவில் தெருவில் உள்ள ராணி என்பவரின் குடிசை வீட்டில் பகுருதீன் என்பவர் வசித்து வருகிறார். இந்த நிலையில் பகுருதீன் நேற்று வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டார்.
நேற்று மதியம் வீட்டில் திடீரென தீப்பிடித்தது. இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் நாகை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனே 2 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர்.
அதில் வீட்டில் இருந்து கட்டில், பீரோ உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. இதன் மதிப்பு ரூ.50 ஆயிரம் இருக்கலாம் என கூறப்படுகிறது.
இதுகுறித்து வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.