செய்திகள்
கைது

ஈரோட்டில் பெண்ணுக்கு அரிவால் வெட்டு- வாலிபர் கைது

Published On 2019-12-29 19:21 IST   |   Update On 2019-12-29 19:21:00 IST
ஈரோட்டில் தகராறில் பெண்ணை அரிவாளால் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு:

ஈரோடு கருங்கல்பாளையம் வைராபாளையம் வாட்டர் ஆபீஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி தேவகி (வயது 35). இவர்களது மகன் ரோகன்.

ரோகன் வீட்டு அருகே தனது நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த அபி நந்தன் என்ற சிறுவனுடன் ரோகன் விளையாடினார். இவர்கள் விளையாடி கொண்டிந்த போது இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை ஏற்பட்டது.

இது குறித்து ரோகனின் அம்மா தேவகி அபிநந்தனின் சித்தப்பா செந்தில்குமார் (35). என்பவரிடம் முறையிட்டார். அப்போது தேவகி மற்றும் செந்தில்குமாருக்கு இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.

இதில் செந்தில்குமார் தேவகியை தகாத வார்த்தையால் பேசியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த செந்தில்குமார் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து வந்து தேவகியை வெட்டினார்.

இதில் தேவகி உடலில் பல்வேறு இடங்களில் வெட்டு விழுந்தது. படுகாயம் அடைந்த தேவகியை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து கருங்கல் பாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து தேவகியை தாக்கிய செந்தில்குமாரை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Similar News