செய்திகள்
மேட்டூர் அணை

ஈரோடு மாவட்ட பாசன பகுதிகளுக்கு தண்ணீர் திறப்பு நீட்டிப்பு

Published On 2019-12-28 10:29 GMT   |   Update On 2019-12-28 10:29 GMT
மேட்டூர் அணையில் இருந்து ஈரோடு மாவட்ட பாசன பகுதிகளுக்கு தண்ணீர் திறப்பு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு:

ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மேட்டூர் அணை மேட்டூர் கிழக்குக்கரை கால்வாய் பாசனப் பகுதியில் 27 ஆயிரம் ஏக்கர் நிலங்கள், மேற்கு கரை கால்வாய் பாசனப் பகுதியில் 18 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் என மொத்தம் 45 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதற்கு மேட்டூர் அணையில் இருந்து 13.8.2019 முதல் 27.12.2019 வரை வினாடிக்கு 1,000 கன அடி வீதம் மொத்தம் 9,605 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

மேட்டூர் அணையில் இருந்து மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாய்களின் பாசன பகுதிகளுக்கு 2019-2020-ம் ஆண்டின் பாசனத்திற்காக தண்ணீர் வழங்கும் காலத்தை நீட்டிப்பு செய்ய கோரிக்கை விடப்பட்டது.

இதையடுத்து மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாய்களின் பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் வழங்கும் காலம் இன்று முதல் 15.1.2019 வரை 19 நாட்களுக்கு நீடித்து வினாடிக்கு 600 கன அடி வீதம், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

அதன்படி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை மற்றும் பவானி ஊராட்சி ஒன்றிய பகுதிகளை சார்ந்த மேட்டூர் மேற்கு கரை வாய்க்கால் பாசன பகுதிகள் 17,230 ஏக்கர் பாசன நிலங்கள் பயனடையும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News