போலீஸ் விசாரணைக்கு சென்ற டிரைவர் திடீர் மரணம்- உறவினர்கள் போராட்டம்
தாம்பரம்:
தாம்பரத்தை அடுத்த இரும்புலியூரை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் (வயது 48). வண்டலூரில் உள்ள தனியார் கல்லூரியில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இரவு அவர் இரும்புலியூரில் உள்ள டயர் ஷோரூம் முன்பு மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது ஷோரூம் ஊழியர்கள் சுந்தர்ராஜனை அங்கிருந்து செல்லுமாறு கூறினர். இதில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த சுந்தர்ராஜன் அருகில் கிடந்த கல்லை ஷோரூம் கண்ணாடி மீது வீசினார். இதில் கண்ணாடி உடைந்தது.
இதுபற்றி ஷோரூம் ஊழியர்கள் தாம்பரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து சுந்தர் ராஜனை விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
இதுபற்றி அறிந்ததும் அவரது உறவினர்கள் போலீஸ் நிலையத்துக்கு திரண்டு வந்தனர். இதையடுத்து சுந்தர்ராஜனை போலீசார் எச்சரித்து அங்கிருந்து அனுப்பி விட்டனர்.
இரவு வீட்டுக்கு சென்ற அவர் தூங்கி விட்டார். காலையில் நீண்ட நேரம் ஆகியும் அவர் எழவில்லை. சந்தேகம் அடைந்த உறவினர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சுந்தர்ராஜன் மாரடைப்பால் இறந்து விட்டதாக தெரிவித்தனர். போலீஸ் தாக்கியதால் தான் சுந்தர்ராஜன் இறந்ததாக குற்றம் சாட்டி அவரது உறவினர்கள் ஏராளமானோர் தாம்பரம் போலீஸ் நிலையம் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசாரிடம் கடும் வாக்குவாதம் செய்தனர்.
போலீஸ் அவர்களிடம் சமாதானம் பேசி கலைந்து போகச் செய்தனர். இது குறித்து சுந்தர்ராஜனின் உறவினர் ஒருவர் கூறும்போது, ‘போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட சுந்தர்ராஜன் கடுமையாக தாக்கப்பட்டு உள்ளார்.
அவரது உடலில் காயங்கள் இருந்தன. போலீசார் தாக்கியதால் தான் அவர் இறந்து உள்ளார். அவருக்கு எந்த இருதய பாதிப்பும் கிடையாது’ என்றனர்.
சுந்தர்ராஜன் உடல் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ் பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.