கோபி அருகே பெண்ணுக்கு பாலியல் தொல்லை- தட்டிக்கேட்ட 3 பேருக்கு கத்திகுத்து
கோபி:
கோபி அருகே உள்ள தாழைகொம்பு புதூரை சேர்ந்தவர் கண்ணதாசன் (வயது 40). இவர் நம்பியூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார். நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ்குமார், ராஜ்குமார், வெற்றிசெல்வன் ஆகியோர் முன் விரோதம் காரணமாக கண்டக்டர் கண்ணதாசனை தாக்கியதாக தெரிகிறது.
கண்ணதாசன் அந்த பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் இதை கண்டித்து மேற்கண்ட 3 பேரும் தாக்கியதாக தெரிகிறது. இதில் ஆத்திரம் அடைந்த கண்ணதாசன் தான் வைத்திருந்த கத்தியால் 3 பேரையும் சரமாரியாக குத்தினார். இதில் படுகாயம் அடைந்த 3 பேரும் கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.
பிறகு மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து கோபி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.