கிண்டி ரெயில் நிலையத்தில் போலீஸ் போல் நடித்து பெண் ஊழியரை கடத்த முயற்சி- 5 பேர் கைது
ஆலந்தூர்:
கிண்டி அருகே உள்ள வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவருடைய மனைவி சுபாஷினி (42). ரெயில்வே ஊழியர்.
மாம்பலம் ரெயில் நிலையத்தில் எழுத்தராக வேலை பார்க்கும் சுபாஷினி, இன்று காலை ரெயிலுக்காக கிண்டி ரெயில் நிலையத்தில் காத்திருந்தார். அப்போது ஒரு பெண் அங்கு வந்து தன்னை பெண் போலீஸ் என்று அறிமுகம் செய்து கொண்டார். உடன் வந்த 2 ஆண்களும் போலீஸ் என்று கூறினர். அந்த பெண் முகத்தை துணியால் மறைத்து இருந்தார்.
அவர் சுபாஷினியிடம், “உங்கள் மீது ஒரு புகார் இருக்கிறது. பெரம்பூர் போலீசார் உங்களிடம் விசாரிக்க வேண்டும். இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமியும் மற்ற போலீசாரும் காரில் இருக்கிறார்கள். எங்களுடன் வாருங்கள் என்றார். அவர் போக மறுக்கவே அந்த பெண் கையை பிடித்து இழுத்தார். இதனால் சுபாஷினி கத்தினார்.
சத்தம் கேட்டு ரெயில்வே போலீசார் அங்கு வந்தனர். இதற்குள் அந்த பெண் தப்பி ஓடினார். உடன் வந்த ஆண், போலீசார் சிக்கிக் கொண்டனர். விசாரணையில் அவருடன் காரில் வந்தவர்கள் நின்ற இடத்தை அறிந்து அவர்களை போலீசார் மடக்கினார்கள்.
சுபாஷினியிடம் பேசியவர் பெண் வதனி என்பதும். உடன் வந்த ஆண்கள் வியாசர்பாடி ஜீவானந்தம், பாலகுரு என்பதும் விசாரணையில் தெரியவந்தது. காரில் முத்துலட்சுமி, வதனி, தமிழ்ச்செல்வி ஆகியோர் இருந்தனர்.
விசாரணையில், ரெயில்வே பெண்ஊழியர் சுபாஷினியை கடத்தி பணம் பறிக்க திட்ட மிட்டது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸ் போல் நடித்து ரெயில்வே பெண் ஊழியரை கடத்த முயன்ற வதனி, முத்து லட்சுமி, தமிழ்செல்வி, ஜீவானந்தம், பாலகுரு ஆகிய 5 பேரை கிண்டி போலீசார் கைது செய்தனர்.
சுபாஷினியை போலீசார் போல் நடித்து கடத்த முயன்றது ஏன் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.