அரக்கோணத்தில் ஓடும் ரெயில் மேல் படுக்கை சீட்டில் இருந்து தவறி விழுந்து ரெயில்வே ஊழியர் பலி
அரக்கோணம்:
திருநெல்வேலியை சேர்ந்தவர் காஜா மொய்தீன் (வயது 56). ரெயில்வே ஊழியர். இவர் மும்பையில் இருந்து சென்னை வரும் மும்பை எக்ஸ்பிரஸ் ரெயிலில் மேல் படுக்கை சீட்டில் வந்து கொண்டிருந்தார்.
அரக்கோணம் அருகே ரெயில் வந்து கொண்டிருந்தது. அப்போது ரெயிலில் மேல் படுக்கை சீட்டில் இருந்து எதிர்பாராத நிலையில் காஜாமொய்தீன் ரெயில் பெட்டிக்குள் தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவர் மயங்கினார்.
அதிர்ச்சி அடைந்த பயணிகள் உடனடியாக அரக்கோணம் ரெயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
ரெயில் அரக்கோணத்திற்கு வந்ததும் காஜா மொய்தீனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
பின்னர் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.