செய்திகள்
கோப்பு படம்

காதலை கைவிட மறுத்த மகளை தீ வைத்து கொன்ற தாய்

Published On 2019-11-20 05:15 GMT   |   Update On 2019-11-20 05:15 GMT
நாகப்பட்டினம் அருகே காதலை கைவிட மறுத்த ஆத்திரத்தில் மகளை தீ வைத்து கொன்று, தாயும் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் திட்டச்சேரி அடுத்த வாழ்மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 58). இவரது மனைவி உமா மகேஸ்வரி. இவர்களது 17 வயது மகள், அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்து வந்தார்.

இதுபற்றி கேள்விப்பட்ட பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மகளை கண்டித்தனர். இதற்கிடையே காதலை கைவிட மறுத்து காதலனுடன் வெளியூருக்கு செல்ல முயன்ற மகளை பெற்றோர் தேடி கண்டுபிடித்து வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் காதலனை சந்தித்து மகள் பேசிக் கொண்டிருந்ததை உமா மகேஸ்வரி பார்த்தார். இதுபற்றி நேற்றுமுன்தினம் இரவு மகளிடம் உமா மகேஸ்வரி கேட்டார். அப்போது தாய் பேச்சை கேட்காமல் எதிர்த்து பேசியதால் ஆத்திரமடைந்த உமா மகேஸ்வரி மண்எண்ணையை எடுத்து மகள் மீது ஊற்றி தீ வைத்து விட்டு தனது உடலிலும் ஊற்றி தீ வைத்தார்.

இதனால் உடல் கருகி இருவரும் அலறினர். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து தாய்- மகள் இருவரையும் மீட்டு நாகை மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை மகள் இறந்தார்.

இதற்கிடையே தாய் உமா மகேஸ்வரி தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து திட்டச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

காதலை கைவிட மறுத்த மகளை தாயே எரித்து கொன்ற சம்பவம் நாகை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News