செய்திகள்
விபத்து

திருமானூர் அருகே மொபட் மோதி விவசாயி பலி

Published On 2019-11-15 16:16 GMT   |   Update On 2019-11-15 16:16 GMT
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே மொபட் மோதி விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.
கீழப்பழுவூர்:

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட செட்டிகுழி கிராமத்தை சேர்ந்தவர் காமராஜ்(வயது 47). விவசாயியான இவர் நேற்று முன்தினம் மாலை கோவிலூர் கிராமத்தில் நடந்த வாரச்சந்தைக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று காய்கறிகள் வாங்கிக்கொண்டு இரவு 9 மணி அளவில் கோவிலூரில் இருந்து செட்டிகுழி செல்லும் சாலையில் சென்றார். அப்போது எதிரே கோவிலூர் கிராமத்தை சேர்ந்த கணேசன்(63) மற்றும் கெங்காதுரையை சேர்ந்த தம்பிதுரை(30) ஆகிய இருவரும் கோவிலூர் நோக்கி மொபட்டில் வந்துள்ளனர். 

அப்போது சிவன் கோவில் தெரு அருகே எதிர்பாராதவிதமாக இரு வாகனங்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட காமராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தில் படுகாயமடைந்த கணேசன் மற்றும் தம்பிதுரையை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இதுகுறித்து தகவல் அறிந்த திருமானூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காமராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News