ஆம்பூர் அருகே மூதாட்டி கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது
ஆம்பூர்:
ஆம்பூர் அடுத்த கொல்லகுப்பத்தை சேர்ந்தவர் ராஜம்மாள் (வயது75). கணவரை இழந்த இவர் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவரது கொள்ளுப்பேரன் மோனிஷ்(21) என்பவர் பெங்களூருவில் வசித்து வருகிறார். ஆட்டோ ஓட்டுனரான இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நண்பர்களுடன் கொல்லகுப்பம் வந்துள்ளார்.
அப்போது பாட்டியிடம் இருக்கும் நகை, பணம் கேட்டு மோனிஷ் மிரட்டியுள்ளார். அதற்கு அவர் கொடுக்க முடியாது என்று கூறியதால் ஆத்திரமடைந்த மோனிஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்து மயக்க ஸ்பிரேவை ராஜம்மாயின் முகத்தில் அடித்து கொலை செய்தனர்.
இது தொடர்பாக ஆம்பூர் தாலுகா போலீஸ் ஆய்வாளர் கோகுல்ராஜ் வழக்குபதிவு செய்து மோனிஷ் மற்றும் அவரது நண்பர் பிரஜேஸ் ஆகியோரை கைது செய்தனர்.
இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த வினய் (27) பெங்களுரில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. அவரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர் என்று தெரிவித்தனர்.