செய்திகள்
கோப்புப்படம்

ஸ்ரீபெரும்புதூர் அருகே கணவர் இறந்த சோகத்தில் காதல் மனைவி தற்கொலை

Published On 2019-11-02 08:40 GMT   |   Update On 2019-11-02 08:40 GMT
ஸ்ரீபெரும்புதூர் அருகே விபத்தில் கணவர் இறந்த துக்கம் தாளாமல் காதல் மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
படப்பை:

ஸ்ரீபெரும்புதூர் அருகே ஒரகடம் அடுத்த அண்ணா நகரை சேர்ந்தவர் சோனு என்கிற பாலாஜி (22).

ஒரகடம் சிப்காட்டில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவர் அதேபகுதியை சேர்ந்த ரசிதா (20) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் நேற்று பாலாஜி மோட்டார் சைக்கிளில் செரப்பணஞ்சேரியில் இருந்து படப்பை நோக்கி சென்றுகொண்டிருந்தார்.

வெள்ளேரிதாங்கள் சந்திப்பு அருகே சென்றபோது பின்னால் வந்த லாரி, இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த பாலாஜி தலை மீது லாரி சக்கரம் ஏறி இறங்கியதில், தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

மணிமங்கலம் போலீசார் சடலத்தை கைப்பற்றி ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கணவன் இறந்ததை தாங்க முடியாமல், ரசிதா இரவு முழுவதும் அழுதவாறு இருந்தார். இன்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ரசிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து மணிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கணவர் இறந்த துக்கம் தாளாமல் காதல் மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News