செய்திகள்
கொள்ளை

அரக்கோணம் அருகே டாஸ்மாக் சூப்பர்வைசரை தாக்கி ரூ.1 லட்சம் பறிப்பு

Published On 2019-11-02 10:32 IST   |   Update On 2019-11-02 10:32:00 IST
அரக்கோணம் அருகே டாஸ்மாக் சூப்பர்வைசரை தாக்கி பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரக்கோணம்:

அரக்கோணம் அடுத்த மின்னல் பகுதியை சேர்ந்தவர் அருள் (வயது 45), இவர் திருவள்ளுர் மாவட்டம் திருத்தணி அடுத்த கசவராஜபேட்டையில் உள்ள டாஸ்மாக் கடையில் சூப்பர்வைசராக வேலை செய்து வருகிறார். நேற்று வழக்கம்போல் டாஸ்மாக் கடையில் விற்பனை முடிந்து கடையை மூடினார்.

பின்னர் வசூலான ரூ.1 லட்சத்து 18 ஆயிரம் பணத்தை எடுத்துகொண்டு பைக்கில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அரக்கோணம் அடுத்த மிட்டப்பேட்டை என்ற இடத்தில் வந்தபோது பின்னால் பைக்கில் வந்த 2 பேர் திடீரென அருள் பைக்மீது மோதினர். அருள் பைக்கில் இருந்து கீழே விழுந்தார்.

இதையடுத்து 2 பேரும் அருளை சரமாரியாக தாக்கி அவரிடம் இருந்த பணத்தை பறித்துகொண்டு பைக்கில் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து அருள் அரக்கோணம் தாலுகா போலீசில் புகார் அளித்தார். டி.எஸ்.பி மனோகரன் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, சப்-இன்ஸ்பெக்டர் சிரஞ்சிவிலு மற்றும் போலீசார் வழிப்பறி நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரித்தார்.

கொள்ளையர்கள் தாக்கியதில் காயம் அடைந்த அருள் அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவருகிறார். இதுகுறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Similar News