வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை திடீர் மரணம்
வேலூர்:
குடியாத்தம் டி.டி. மோட்டூரை சேர்ந்தவர் இமயவர்மன். இவரது மனைவி ஜான்சிராணி. தம்பதிக்கு கடந்த மாதம் 30-ந் தேதி குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை பிறந்தது. 3.5 கிலோ எடையில் பிறந்த அந்த குழந்தை அழவே இல்லையாம். மேலும் அசையாமல் இருந்தது.
இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் குழந்தையை அனுமதித்தனர். அங்குள்ள தீவிர சிகிச்சை பிரிவில் கடந்த 1 மாதமாக குழந்தைக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் இன்று காலை குழந்தை இறந்தது.
இதனால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். டாக்டர்கள் சரியாக சிகிச்சை அளிக்கவில்லை, சரியாக கவனிக்கவில்லை என குற்றம் சாட்டிய பெற்றோர் மற்றும் உறவினர்கள் 30-க்கும் மேற்பட்டோர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவு முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, ஆஸ்பத்திரி டீன் செல்வி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
குழந்தை சாவுக்கான காரணம் என்ன என்பதை தெரிவிக்க வேண்டும் என பெற்றோர்கள் கூறினர். 1 மணி நேரத்திற்கு மேலாக பேச்சுவார்த்தை நீடித்தது.
இந்த சம்பவம் ஆஸ்பத்திரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.