மகளுக்கு தீபாவளி பலகாரம் கொண்டு சென்றபோது பைக்கில் இருந்து விழுந்து பெண் பலி
ஸ்ரீபெரும்புதூர்:
உத்தரமேரூரை சேர்ந்தவர் பச்சையப்பன். இவரது மனைவி விஜயலட்சுமி (58).
இவர்களுடைய மகள் சுங்குவார்சத்திரம் அருகே உள்ள காந்தூர் கிராமத்தில் வசித்து வருகிறார். மகளுக்கு தீபாவளி பலகாரம் கொண்டு செல்ல விஜயலட்சுமி முடிவு செய்தார்.
இதற்காக தனது மகன் புண்ணியகோடியுடன் மோட்டார் சைக்கிளில் மகள் வீட்டுக்கு புறப்பட்டார். பின்னால் உட்கார்ந்திருந்த அவர் பலகார பையை கையில் வைத்து இருந்தார்.
மோட்டார் சைக்கிள் சுங்குவார்சத்திரம்- திருவள்ளூர் சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக பலகார பையின் கைப்பிடி அறுந்ததால் அதை பிடிக்க முயன்ற விஜயலட்சுமி மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
தலையில் பலத்த காயம் அடைந்த அவரை அருகில் இருந்த ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றார்கள். ஆனால் வழியிலேயே விஜயலட்சுமி பரிதாபமாக உயிர் இழந்தார்.
சுங்குவார்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் விசாரணை நடத்தி வருகிறார்.