செய்திகள்
சீர்காழி பகுதியில் பரவும் மர்ம காய்ச்சல்- பொதுமக்கள் அவதி
நாகை மாவட்டம் சீர்காழி பகுதியில் பரவும் மர்ம காய்ச்சலால் பொதுமக்கள் பாதிப்பு அடைந்து வருகின்றனர்.
சீர்காழி:
நாகை மாவட்டம் சீர்காழியில் தலைமை அரசு மருத்துவமனை உள்ளது. நாள்தோறும் சுமார் 1500-க்கும் மேற்பட்டவர்கள் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்நிலையில் கடந்த சில வாரங்களாக மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களில் பலர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு படையெடுக்கின்றனர். பலர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேபோல் சீர்காழியை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து 21 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 19பேர் தீவிர சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினர். இரண்டு பேர் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சீர்காழி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்காக தனி பிரிவு அமைக்கப்பட்டு அங்கு 22 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, சீர்காழி, கொள்ளிடம் பகுதியில் மர்ம காய்ச்சல் பாதிப்பு பலருக்கு ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் வீடுகளின் சுற்றுப்புறங்கள், சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். குப்பைகளை அன்றாடம் அகற்றி பிளீசிங் பவுடர் தெளிக்க வேண்டும். வீடுகள் தோறும் கொசு மருந்து தெளிக்கும் முறையை மீண்டும் அரசு நடைமுறை படுத்த வேண்டும் என்றார்.