செய்திகள்
காட்பாடி விருதம்பட்டில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
காட்பாடி விருதம்பட்டில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வேலூர்:
காட்பாடி விருதம்பட்டில் கடந்த சில நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. மேலும் அங்குள்ள தெருக்களில் கழிவுநீர் கால்வாய்கள் சேதமடைந்துள்ளன. இதனால் கழிவுநீர் தெருக்களில் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் இன்று காலை காட்பாடி- வேலூர் மெயின் ரோட்டில் சாலை மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விருதம்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர், கழிவுநீர் கால்வாய் பிரச்சினைக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.
இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.