செய்திகள்
திருமண கோஷ்டியினர் சென்ற வேன் கவிழ்ந்து 10 பேர் காயம்
ஜெயங்கொண்டம் அருகே திருமண கோஷ்டியினர் சென்ற வேன் பல்லத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் காயம் அடைந்தனர்.
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் அருகே உள்ள தே.மங்களம் கிராமத்தில் துரைராஜ் என்பவரது வீட்டு திருமணத்திற்காக இன்று காலை கழுவன் தோண்டி கிராமத்தில் இருந்து 15 பேர் ஒரு வேனில் புறப்பட்டனர்.
வேன் கிலால் கிராமத்தை தாண்டி செல்லும்போது எதிரே வந்த இருசக்கர வாகனத்திற்கு வழிவிடுவதற்காக டிரைவர் வேனை ஒருபுறமாக திருப்பினார். இதனால் தாறுமாறாக ஓடிய வேன் சாலையின் அருகே இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் வேனில் இருந்த 10 பேர் காயமடைந்தனர். அவர்களை பொதுமக்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவம் குறித்து த.பழுர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.