செய்திகள்
துப்பாக்கி சூடு

புதுக்கோட்டை அருகே தொழிலாளி மீது துப்பாக்கி சூடு

Published On 2019-09-06 15:54 GMT   |   Update On 2019-09-06 15:54 GMT
புதுக்கோட்டை அருகே தோட்டத்தில் தீ வைத்த தகராறில் தொழிலாளியை துப்பாக்கியால் சுட்ட கூட்டுறவு சங்க தலைவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
ஆலங்குடி:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள சேந்தன்குடியை சேர்ந்தவர் தனசேகரன். திருவரங்குளம் ஒன்றிய அ.தி.மு.க. முன்னாள் சேர்மனான இவரது மகன் விமல் (வயது 35). நகரம் கூட்டுறவு சங்க தலைவராக உள்ளார். இவருக்கு அதே பகுதியில் விவசாய நிலம் உள்ளது. 

இந்த நிலத்துக்கு அருகே அதே பகுதியை சேர்ந்த கலைச்செல்வன் என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கலைச்செல்வனின் நிலத்தில் வேலை செய்யும் விவசாய தொழிலாளி சுரேஷ் என்பவர் காய்ந்த சருகுகளுக்கு தீ வைத்துள்ளார். 

அந்த தீ அருகே உள்ள விமலின் தோட்டத்திற்கும் பரவி அங்குள்ள மரம் மற்றும் செடிகள் கருகின. இதுகுறித்து விமலின் தாயார் வசந்தா தட்டிக்கேட்டபோது, சுரேஷ் அநாகரீகமாக பேசியுள்ளார். இது பற்றி தனது மகன் விமலிடம் வசந்தா முறையிட்டார். 

இதையடுத்து விமல் மற்றும் அவரது கார் டிரைவர் ராஜராஜன் ஆகியோர் தோட்டத்திற்கு சென்றபோது, அங்கு சுரேஷ் இருப்பதை பார்த்து அவரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்து தப்பி ஓடிய சுரேசை தனது கைத்துப்பாக்கியால் விமல் 2 முறை சுட்டுள்ளார். குறி தவறியதால் சுரேஷ் தப்பினார். 

இது குறித்து சுரேஷ் கொடுத்த புகாரின் பேரில் கீரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் ராஜராஜனை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள விமலை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News