செய்திகள்
இன்ஸ்பெக்டர் கனி

வேலூரில் இன்ஸ்பெக்டர் வி‌ஷம் குடித்து தற்கொலை முயற்சி

Published On 2019-09-05 10:31 GMT   |   Update On 2019-09-05 10:31 GMT
வேலூரில் பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் விரக்தியடைந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

வேலூர்:

வேலூர் மாவட்டம் அரக்கோணம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் கனி (வயது 54). இவருக்கும் அரக்கோணத்தில் அரசியல் கட்சியினை சேர்ந்தவர்களுக்கும் மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது.

இதுபற்றி போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு புகார் வந்ததையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு இன்ஸ்பெக்டர் கனி அரக்கோணத்தில் இருந்து வேலூர் ஆயுதப்படை இன்ஸ்பெக்டராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவரோடு அரக்கோணம் போக்குவரத்து பிரிவில் பணியாற்றிய போலீசாரும் கூண்டோடு மாற்றப்பட்டனர். பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் இன்ஸ்பெக்டர் கனி மிகவும் விரக்தி அடைந்தார்.

இது பற்றி சக அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் விடுமுறை கேட்டும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் மருத்துவ விடுப்பில் சென்ற அவர் வேலூர் ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில் உள்ள வீட்டில் இருந்தார்.

மனமுடைந்து காணப்பட்ட அவர் வி‌ஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பணியிட மாற்றத்தால் போலீஸ் இன்ஸ்பெக்டர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News