செய்திகள்
கைது

மது போதையில் தகராறு: கணவனை கொன்று கிணற்றில் வீசிய மனைவி கைது

Published On 2019-09-02 14:10 GMT   |   Update On 2019-09-02 14:10 GMT
ஆலங்குடி அருகே மது போதையில் தகராறு செய்த கணவனை கொன்று கிணற்றில் வீசிய மனைவியை போலீசார் கைது செய்தனர்.

ஆலங்குடி:

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள அம்மையன்புரத்தை சேர்ந்தவர் அம்மையப்பன். இவரது மகன் முத்துக்கருப்பன் (வயது 35). தச்சுத்தொழிலாளி. இவருக்கு அஞ்சலை (34) என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். முத்துக்கருப்பன் தினமும் கிடைக்கும் வருமானத்தில் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்து, அஞ்சலையுடன் தகராறு செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 31-ந்தேதி முத்துக்கருப்பன் மது குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அஞ்சலை, கணவரை கட்டிலில் தள்ளியுள்ளார். பின்னர் அஞ்சலை தனது குழந்தைகளுடன் வீட்டில் தூங்கினார். இந்நிலையில் இரவில் அவர், முத்துக்கருப்பனை பார்த்தபோது அவர் பேச்சு, மூச்சு இல்லாமல் கிடந்தார். மேலும் அவரை எழுப்பிய போது, அவர் எழவில்லை. இதையடுத்து முத்துக்கருப்பன் இறந்து கிடந்தது அஞ்சலைக்கு தெரியவந்தது. 

இதைத்தொடர்ந்து அஞ்சலை, யாருக்கும் தெரியாமல் முத்துக்கருப்பனின் உடலை இழுத்துச்சென்று வீட்டருகே உள்ள பாழடைந்த கிணற்றில் வீசிவிட்டு, ஒன்றும் நடக்காதது போல் வீட்டில் படுத்து தூங்கியுள்ளார்.

இந்நிலையில் நேற்று கிணற்றுக்குள் முத்துக்கருப்பன் பிணமாக கிடந்ததை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து, ஆலங்குடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கிணற்றுக்குள் இறங்கி முத்துக்கருப்பனின் உடலை கைப்பற்றி வெளியே கொண்டு வந்தனர். பின்னர் அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அஞ்சலை தள்ளி விட்டதில் முத்துக்கருப்பன் இறந்தது தெரியவந்தது. இது குறித்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து அஞ்சலையை கைது செய்து புதுக்கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதற்கிடையே தந்தையையும், தாயையும் பிரிந்த குழந்தைகள் கதறி அழுதது அங்கிருந்தவர்களை கண்கலங்க செய்தது. தொழிலாளியை மனைவியே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News