செய்திகள்
கொள்ளை

செந்துறை அருகே நல்லப்பா கோவில் பூட்டை உடைத்து ரூ.3 லட்சம் பொருட்கள் கொள்ளை

Published On 2019-08-22 14:14 GMT   |   Update On 2019-08-22 14:14 GMT
செந்துறை அருகே உள்ள நல்லப்பா கோவில் பூட்டை உடைத்து 3 லட்சம் மதிப்பிலான குத்துவிளக்குகள் மற்றும் உண்டியல் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றனர்.
செந்துறை:

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள கீழராயம்புரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற நல்லப்பா கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலை தமிழகத்தின் பல மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஆவணி மாதம் முதல் திங்கட்கிழமை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி கடந்த திங்கட்கிழமை இந்த கோவிலில் திருவிழா நடைபெற்றது. 

இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை எடுத்தனர். அதன் பின்னர் கோவிலுக்குள் இருந்த செம்பு குத்துவிளக்கு 16 மற்றும் அதன் அருகில் உள்ள மற்றொரு நல்லப்பா கோவிலில் இருந்த 23 செம்பு குத்து விளக்குகளையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். கொள்ளை போன பொருட்களின் மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த இரும்புலிக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா, சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் பாபு உள்ளிட்ட போலீசார் கொள்ளை சம்பவம் நடந்த கோவிலுக்கு விசாரணை மேற்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து அரியலூரில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் திருவிழா முடிந்த பின்னர் கொள்ளை சம்பவம் நடைபெற்று வருவது அப்பகுதி பக்தர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் உரிய விசாரணை நடத்தி கொள்ளையர்களை கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோல் மருதூர் பெரியசாமி கோவில், ராயபுரம் மாரியம்மன் கோவில் மற்றும் செந்துறையில் உரக்கடை ஒன்றிலும் நேற்று ஒரே நாள் நள்ளிரவில் கொள்ளையர்கள் புகுந்துள்ளனர்.
Tags:    

Similar News