செய்திகள்
பெட்ரோல் பங்க் கழிப்பறையில் செல்போனை மறைத்து பெண்களை ஆபாச படம் எடுத்த வாலிபர் கைது
புதுக்கோட்டை அருகே பெட்ரோல் பங்க் கழிப்பறையில் செல்போனை மறைத்து பெண்களை ஆபாச படம் எடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஆலங்குடி:
தஞ்சை மாவட்டம் ஆவணம் பெரியநாயகிபுரத்தை சேர்ந்த அன்பழகன் மகன் பிரபாகரன் (வயது22). இவர் புதுக்கோட்டை மாவட்டம் புளிச்சங்காடு கைகாட்டி பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் விற்பனையாளராக வேலை செய்து வந்தார். அங்கு பெண்கள் சிலரும் வேலை பார்த்து வந்தனர்.
இந்த நிலையில் பிரபாகரன் செல்போனில் அங்கு வேலை பார்த்து வந்த பெண்கள் சிலரின் ஆபாச படங்கள் இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து அவரிடம் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் விசாரணை நடத்தினர். இதனிடையே பாதிக்கப்பட்ட பெண்களின் பெற்றோர் , வடகாடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார், பிரபாகரனிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர், பெட்ரோல் பங்க்கில் பெண்கள் பயன்படுத்தும் கழிப்பறையில் செல்போனை மறைத்து வைத்து கேமரா மூலம் பெண்களை ஆபாச படம் எடுத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் பிரபாகரன், பெண்களின் ஆபாச படங்களை வேறு யாருக்காவது அனுப்பியுள்ளாரா? அந்த படங்களை வைத்து மிரட்டினாரா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். சைபர் கிரைம் போலீசாரும் செல்போனை ஆய்வு செய்து வருகின்றனர்.