செய்திகள்
திருவரங்குளத்தில் ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திருவரங்குளத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவரங்குளம்:
திருவரங்குளத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு திருவரங்குளம் ஒன்றிய செயலாளர் நாடியம்மை தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நிலவி வரும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் பல கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று தண்ணீர் எடுத்து வரும் அவல நிலை உள்ளது. மேலும் 100 நாள் வேலை திட்டம் வேலை வழங்கப்படாமல் உள்ளது. இதனை உடனடியாக வழங்கிட வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.
இதில் மாதர் சங்கத்தை சேர்ந்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர். இதையடுத்து ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களிடம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) கோகுலகிருஷ்ணன், அனைத்திந்திய மாதர் சங்க மாவட்ட செயலாளர் சலோமி, திருவரங்குளம் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் செயலாளர் வடிவேல், கிளை செயலாளர் ராஜா கண்ணு ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஒன்றியத்தில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க துரித நடவடிக்கை எடுப்பதாகவும், ஒன்றிய பகுதிகளில் 100 நாள் வேலை திட்டத்தை செயல்படுத்துவதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலர் கூறியதன் அடிப்படையில் ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் கலைந்து சென்றனர்.