வேலூர் பாகாயத்தில் நடத்தை சந்தேகத்தால் பெண் அடித்துக் கொலை
வேலூர்:
வேலூர் பாகாயம் சஞ்சீவிபுரத்தை சேர்ந்தவர் ஸ்டான்லிஜான் (42). தனியார் ஆஸ்பத்திரியில் உதவியாளராக வேலைபார்த்து பணி நீக்கம் செய்யப்பட்டார். இவரது மனைவி ஜெயந்தி (40).
ஸ்டான்லி ஜானுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்தது. குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறில் இடுபட்டு வந்தார். மனைவியின் நடத்தையில் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
நேற்று முன்தினம் இரவு கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரத்தில் உருட்டு கட்டையால் ஜெயந்தியை தாக்கினார். விடிய, விடிய அடித்து சித்ரவதை செய்தார். நேற்று காலை படுகாயத்துடன் எழுந்த ஜெயந்தியை தலை, மார்பு பகுதியில் கட்டையால் தாக்கியுள்ளார். நிலைகுலைந்த அவர் வீட்டுக்குள்ளேயே இறந்தார்.
இதனை கண்ட ஸ்டான்லி ஜான் தப்பி ஓடிவிட்டார் நேற்று மதியம் ஜெயந்தி இறந்து கிடந்ததை அக்கம் பக்கத்தினர் பார்த்துள்ளனர்.
இது பற்றி பாகாயம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக வழக்குபதிவு செய்து ஸ்டான்லி ஜானை தேடி வருகின்றனர்.