செய்திகள்
உயிரிழந்த 2 மாணவர்கள்

ஏரியில் குளித்தபோது சேற்றில் சிக்கி 2 மாணவர்கள் பலி

Published On 2019-07-23 17:21 GMT   |   Update On 2019-07-23 17:21 GMT
திருப்போரூரில் உள்ள ஏரியில் குளித்த போது சேற்றில் சிக்கி 2 மாணவர்கள் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்போரூர்:

திருப்போரூர் அடுத்த சிறுச்சேரியை சேர்ந்தவர் ராஜன். அவரது மகன் மோகன்ராஜ் (வயது 15). ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தான்.

அதே பகுதியை சேர்ந்த டேவிட் என்பவரது மகன் திலீபன் (10). ஐந்தாம் வகுப்பு படித்து வந்தான். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் மாலை தனது நண்பர்கள் 4 பேருடன் அப்பகுதியில் உள்ள ஏரிக்கு குளிக்க சென்றனர்.

அங்கு மோகன்ராஜ், திலீபன் உள்பட நண்பர்கள் 6 பேரும் குளித்த போது, எதிர்பாராதவிதமாக மோகன்ராஜ் மற்றும் திலீபன் ஆகிய 2 பேரும் ஏரியில் உள்ள சேற்றில் சிக்கினர். உடனே, இதனைப்பார்த்து மற்ற நண்பர்கள் கூச்சலிட்டதால், அருகில் இருந்த கிராம மக்கள் ஓடிவந்து, உயிருக்கு போராடி கொண்டிருந்தவர்களை மீட்டனர்.

ஆனால், திலீபனை சோதித்தபோது அவன் இறந்து விட்டது தெரியவந்தது. ஆனால் மோகன்ராஜ் மயக்க நிலையில் இருந்ததால், அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மோகன்ராஜை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து, 2 மாணவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், திலீபனின் பெற்றோர்கள் அவனது கண்ணை மருத்துவமனைக்கு தானம் செய்தனர்.

பின்னர் தாழம்பூர் போலீசார் 2 பேரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 
Tags:    

Similar News