செய்திகள்
தேவகோட்டையில் முதியவரை சரமாரியாக தாக்கி 5 பவுன் நகை பறிப்பு
முதியவரை தாக்கி நகை, பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தேவகோட்டை:
தேவகோட்டை அருகே உள்ள கள்ளிக்குடியைச் சேர்ந்தவர் குப்புசாமி (வயது 65). இவர் மோயன்வயல் கிராமத்தில் உள்ள தோட்டத்தில் வேலை பார்த்து வருகிறார். தினமும் காலையில் பால் வியாபாரத்திற்காக தேவகோட்டைக்கு குப்புச்சாமி மொபட்டில் செல்வது வழக்கம்.
இன்று அதிகாலை வழக்கம் போல் குப்புச்சாமி மொபட்டில் தேவகோட்டைக்கு புறப்பட்டார். பாவனாக்கோட்டை பகுதியில் வந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் குப்புசாமியை வழிமறித்து சரமாரியாக தாக்கினர். பின்னர் அவர் அணிந்திருந்த 5¼ பவுன் செயின் மற்றும் பணத்தை பறித்துக் கொண்டு தப்பினர்.
கொள்ளையர்கள் தாக்கியதில் படுகாயம் அடைந்த குப்புசாமி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இந்த சம்பவம் தொடர்பாக வேலாயுத பட்டணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணி செல்லதுரை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.