செய்திகள்
கொள்ளை

தேவகோட்டையில் பல்பொருள் அங்காடியில் கொள்ளை

Published On 2019-07-18 06:31 GMT   |   Update On 2019-07-18 06:31 GMT
தேவகோட்டையில் பல்பொருள் அங்காடி, மருந்து கடையில் புகுந்த மர்ம நபர்கள் பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர்.
தேவகோட்டை:

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை, திருப்பத்தூர் ரோட்டில் தனியார் பள்ளி உள்ளது. இதன் அருகே பல்பொருள் அங்காடி உள்ளது.

நேற்று இரவு வழக்கம் போல் ஊழியர்கள் கடையை பூட்டிவிட்டுச் சென்று விட்டனர். நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் கடையின் ‌ஷட்டரை உடைத்து உள்ளே நுழைந்தனர். பின்னர் கல்லாவில் இருந்த ரூ.50 ஆயிரம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை திருடினர்.

தொடர்ந்து அந்த கும்பல் அருகில் உள்ள மருந்து கடையிலும் கதவை உடைத்து அங்கிருந்த ரூ. 20 ஆயிரத்தை திருடிக் கொண்டு தப்பியது.

இன்று காலை கடை திறக்க வந்த ஊழியர்கள் கதவு உடைக்கப்பட்டு பணம், பொருட்கள் கொள்ளை போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்த புகாரின் பேரில் தேவகோட்டை டவுன் இன்ஸ்பெக்டர் அந்தோணி செல்லதுரை வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்.

அடுத்தடுத்து 2 இடங்களில் நடந்த கொள்ளை சம்பவம் அந்தப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News