ஈரோடு ஆனைக்கல் பாளையத்தில் விபத்து- ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர் பலி
ஈரோடு:
மொடக்குறிச்சி அடுத்த பஞ்சலிங்க புரத்தைச் சேர்ந்தவர் வரதராஜன் (வயது 63). ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர். நேற்று வரதராஜன் தனது மோட்டார் சைக்கிளில் ஈரோடுக்கு வந்தார். பின்னர் பணியை முடித்துக்கொண்டு பஞ்சலிங்கபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். ஆனைக்கல்பாளையம் பிரிவு அருகே வந்து கொண்டிருந்தபோது எதிரே ஒரு லாரி வந்தது.
அப்போது எதிர்பாராத விதமாக வரதராஜன் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் லாரியின் பின்பக்க சக்கரம் அவர் தலை மீது ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே வரதராஜன் தலை நசுங்கி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக் காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.