வேலூர் ஜெயிலில் இருந்து தப்பி ஓடிய கைதி சிக்கினார்
வேலூர்:
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த அருணகிரி மங்கலத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவர் இளம்பெண் கடத்தல், கற்பழிப்பு வழக்கில் கைது செய்யபட்டு 12 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டு கடந்த 2017-ம் ஆண்டு வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜெயிலுக்கு வெளியே உள்ள தோட்டத்தில் ரமேஷ் உள்பட நன்னடத்தை கைதிகள் சிலர் குழுக்களாக பிரிந்து வேலை செய்து கொண்டிருந்தனர். அவர்களை சிறை காவலர்கள் கண்காணித்து கொண்டிருந்தனர். தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது ஜெயில் கைதிகளுக்கும், சிறை காவலர்களுக்கும் தெரியாமல் ரமேஷ் தப்பி ஓடிவிட்டார்.
இது தொடர்பாக பாகாயம் போலீசில் புகார் செய்யப்பட்டது. ஜெயில் கைதி தப்பி ஓடியபோது பணியில் இருந்த சிறைக்காவலர்களிடம் ஜெயில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
முதன்மை சிறைக்காவலர் குமரவேல், தலைமை சிறைக்காவலர் திருமலை ஆகியோரின் கவன குறைவால் கைதி தப்பி ஒடியது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 2 பேரையும் சஸ்பெண்டு செய்து சிறைதுறை டி.ஐ.ஜி. ஜெயபாரதி உத்தரவிட்டார்.
இதற்கிடையில், செங்கம் புதுப்பாளையத்தில் ரமேஷ் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, திருவண்ணாமலை கிளை சிறை வார்டர்கள் இமானுவேல் சந்திரசேகர், கார்த்திக் ஆகியோர் புதுப்பாளையம் பஸ் நிலையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு பதுங்கி இருந்த ரமேஷை நேற்று பிற்பகல் கைது செய்தனர். பின்னர், அவரை வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.