செய்திகள்
வழக்கு (கோப்பு படம்)

திருவாரூர் அருகே கோவில் தகராறில் இருதரப்பினர் மோதல் - 10 பேர் மீது வழக்கு

Published On 2019-07-02 16:49 GMT   |   Update On 2019-07-02 16:49 GMT
திருவாரூர் அருகே கோவில் தகராறில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து 10 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள துறையூரில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அவ்வூர் பொதுமக்கள் ஒன்றுகூடி மாரியம்மன் கோவிலை புதிதாககட்டி திருவிழாவை கொண்டாடியுள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு இருபிரிவுகளாக பிரிந்தனர். இதனால் திருவிழா தடைபட்டது. இதையடுத்து குடவாசல் தாசில்தார் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததையடுத்து கோவில்கதவு பூட்டப்பட்டது. இதுதொடர்பாக இருபிரிவினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த சூழ்நிலையில் நேற்று ஒருபிரிவினர் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த மற்றொரு தரப்பினர் அவர்களுடன் தகராறில் ஈடுபட்டனர். அப்போது இருபிரிவினரும் ஒருவரை ஒருவர் தாக்கிகொண்டனர்.

இதில் ஒரு தரப்பை சேர்ந்த காளிதாஸ், ரகுவாரன், லட்சுமணன் ஆகியோர் காயமடைந்தனர். இதுகுறித்து காளிதாஸ் குடவாசல் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் ராஜா, சுப்பிரமணியன், இளங்கோவன், ராமதாஸ், தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் மீது இன்ஸ்பெக்டர் ராஜகோபால் வழக்குப்பதிவு செய்து ராஜா என்பரை கைது செய்துள்ளார். மேலும் தப்பிசென்ற குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News