செய்திகள்

பஸ் மோதி விபத்து: ஒரே மோட்டார் சைக்கிளில் சென்ற 3 நண்பர்கள் பலி

Published On 2019-06-17 11:40 GMT   |   Update On 2019-06-17 11:40 GMT
பொறையாறு அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதிய விபத்தில் 3 நண்பர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தரங்கம்பாடி:

நாகை மாவட்டம் பொறையாறு அருகே உள்ள ஆனைக்கோவில் கிராமம் செட்டி தெருவை சேர்ந்தவர் இளையராஜா. இவரது மகன் ஆதித்யன் (வயது 22).

அதே பகுதியை சேர்ந்தவர் ஜீவா மகன் மாரிமுத்து (20), ராமமூர்த்தி மகன் ஆதீஷ் (20). இவர்கள் 3 பேரும் நண்பர்கள். மாரிமுத்து நாகையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் ஆதித்யன், மாரிமுத்து, ஆதீஷ் ஆகியோர் நேற்று மாலை ஒரே மோட்டார் சைக்கிளில் காரைக்காலுக்கு சென்று விட்டு ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

அப்போது பொறையாறு அருகே ஓழுகைமங்கலம் நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தனர். அப்போது சீர்காழியில் இருந்து காரைக்கால் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஆதித்யன், மாரிமுத்து, ஆதீஷ் ஆகிய 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் தலை, கை, கால்களில் பலத்த காயம் அடைந்த அவர்கள் 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

இதுகுறித்து பொறையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் பலியான 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக பஸ் டிரைவர் வாய்மேடு பகுதியை சேர்ந்த கண்ணன் (40) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News