காரைக்குடி அருகே திருமணமான 3 மாதத்தில் இளம்பெண் மர்ம மரணம்-போலீசார் விசாரணை
காரைக்குடி:
காரைக்குடி அருகே உள்ள கானாடுகாத்தானைச் சேர்ந்தவர் கார்த்திக்ராஜா (வயது 30). இவரது மனைவி கஸ்தூரி (25). இருவருக்கும் திருமணமாகி 3 மாதங்கள் ஆகிறது. கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்தது.
நேற்று மாலை மீண்டும் தகராறு எழுந்ததாக தெரிகிறது. இதில் கோபித்துக் கொண்ட கார்த்திக் ராஜா வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார்.
அப்போது வீட்டுக்கு வந்த கார்த்திக் ராஜாவின் தந்தை, மருமகள் தூங்குவதாக நினைத்து அழைத்தார். அதற்கு பதில் இல்லை. அப்போது வீட்டுக்குள் கஸ்தூரி மர்மமான முறையில் இறந்து கிடந்தது தெரியவந்தது.
இது பற்றிய தகவல் அறிந்ததும் கஸ்தூரியின் தந்தை செட்டிநாடு போலீசில் புகார் செய்தார். அதில், எனது மகள் சாவில் மர்மம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து செட்டிநாடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். திருமணமாகி 3 மாதங்களே ஆவதால் கஸ்தூரியின் இறப்பு குறித்து தேவகோட்டை ஆர்.டி.ஓ.வும் விசாரணை நடத்துகிறார்.