காரைக்குடியில் கல்லூரி மாணவி தற்கொலை
காரைக்குடி:
காரைக்குடி கிணற்றடி காளியம்மன் கோவில் தெருவைச்சேர்ந்தவர் ஜெயராமன், கோவில் பூசாரி. இவரது மனைவி பார்வதி (வயது 50). இவர்களது மகள் ஐஸ்வர்யா (22) இவர் அந்த பகுதியில் உள்ள கல்லூரியில் எம்.காம். படித்து வந்தார்.
பார்வதிக்கு மன நலம் சற்று பாதிக்கப்பட்டு இருந்ததால், ஐஸ்வர்யாதான் வீட்டு வேலைகளையும் பார்த்துக்கொண்டு கல்லூரிக்கு சென்று வந்தார்.
நேற்று மாலை கல்லூரி முடிந்து வீட்டுக்கு வந்த ஐஸ்வர்யா, வேலைகளை முடித்துவிட்டு இரவில் வழக்கம்போல் படுக்கச் சென்றார். இன்று காலை ஜெயராமன் எழுந்து மகளை தேடியபோது ஐஸ்வர்யா, துப்பட்டாவால் தூக்குப் போட்டு தற்கொலை செய்திருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து காரைக்குடி தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் வழக்குப்பதிவு செய்து மாணவி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.