செய்திகள்
ஜோலார்பேட்டை ரெயிலில் கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற ரேசன் அரிசி பறிமுதல்
ஜோலார்பேட்டை ரெயிலில் கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
ஜோலார்பேட்டை:
அரக்கோணத்தில் இருந்து கர்நாடகா மாநிலத்திற்கு ரெயில்கள் மூலம் ரேசன் அரிசி கடத்தபடுவதாக ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து நேற்று இரவு சென்னை-மைசூரு செல்லும் காவிரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பயணிகளில் சீட்டுகளின் அடியிலும், கழிவறைகளிலும் சிறு, சிறு மூட்டைகளாக 34 மூட்டைகளில் 250 கிலோ ரேசன் அரிசி பதுக்கி வைக்கபட்டிருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் திருப்பத்தூர் நுகர் பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர். மேலும் ரேசன் அரிசி கடத்த முயன்றவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.