செய்திகள்

திண்டுக்கல்லில் வரத்து குறைந்ததால் எலுமிச்சை விலை கடும் உயர்வு

Published On 2019-05-12 13:57 GMT   |   Update On 2019-05-12 13:57 GMT
திண்டுக்கல்லில் வரத்த குறைந்ததால் எலுமிச்சை விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

திண்டுக்கல்:

திண்டுக்கல் அருகே சிறுமலை மற்றும் கொடைக்கானல் கீழ்மலை பகுதிகளான பன்றிமலை, ஆடலூர், அய்யம்பாளையம், மருதாநதி, தேவரப்பன்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் எலுமிச்சை சாகுபடி செய்து வருகின்றனர்.

இந்த பழங்கள் திண்டுக்கல் சிறுமலை செட் பகுதிக்கு கொண்டு வரப்பட்டு வியாபாரிகளால் ஏலம் எடுக்கப்படுகிறது. மேலும் இந்த எலுமிச்சை பழங்கள் வெளியூர்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

தற்போது கடும் வறட்சி நிலவி வருவதால் எலுமிச்சை விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. மழை இல்லாததால் பழங்கள் விளைச்சல் இன்றி காணப்படுகிறது.

இது குறித்து விவசாயி அழகு என்பவர் கூறுகையில், சிறுமலைசெட்டுக்கு வாரத்துக்கு 3 முறை எலுமிச்சைகளை ஏலமிட கொண்டு வருகிறேன். வழக்கமாக 150 சிப்பம் ஏலம் விடப்படும். ஆனால் தற்போது விளைச்சல் இல்லாததால் வரத்து குறைந்துள்ளது. இதனால் 18 சிப்பம் மட்டுமே கொண்டு வருகிறேன்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறிய எலுமிச்சை ஒரு சிப்பம் ரூ.1500-க்கு விற்கப்பட்டது. தற்போது அது ரூ.4,000 ஆக உயர்ந்துள்ளது. இதே போல் முதல் தர எலுமிச்சை ரூ.3,000-க்கு விலை கேட்கப்பட்டது. தற்போது ரூ.6,000 முதல் ரூ. 7,000 வரை விலை போகிறது.

சிறிய எலுமிச்சை சில்லறையில் ரூ5 முதல் ரூ.7 வரை விலை உயர்ந்துள்ளது. ஆனால் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. இருந்தபோதும் தொடர்ந்து விவசாயத்தை செய்து வருகிறோம் என்றார்.

Tags:    

Similar News