செய்திகள்

கூடலூர் பகுதியில் சூறாவளி காற்றுக்கு 5,000 ஏக்கர் வாழை நாசம்

Published On 2019-05-11 12:40 GMT   |   Update On 2019-05-11 12:40 GMT
கூடலூர் பகுதியில் பலத்த சூறாவளி காற்றுக்கு 5,000 ஏக்கர் வாழை முறிந்து நாசமானது. வீட்டின் மேற்கூரைகளும் பறந்தன.
கூடலூர்:

தேனி மாவட்டம் கூடலூர் அருகே வெட்டுக்காடு, வேளாங்காடு, சீனியர்குளம் படுகை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் தென்னை மற்றும் வாழை சாகுபடி செய்து வருகின்றனர். குறிப்பாக இப்பகுதியில் நாழிபூவன், செவ்வாழை, நேந்திரம் உள்ளிட்ட பல்வேறு வகையான வாழைகள் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளது.

தற்போது அனைத்து வாழைகளும் குலை தள்ளி பலன் தரும் நிலையில் இருந்தன. ரம்ஜான் நோன்பு காலம் தொடங்கியுள்ளதால் முஸ்லிம்கள் அதிக அளவில் வாழைப்பழங்களை வாங்கிச் செல்கின்றனர். இதனால் தேவை அதிகரித்து விலை ஓரளவு கிடைத்தது. எனவே லாபம் கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்து இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று இரவு கூடலூர் லோயர் கேம்ப் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இந்த சூறாவளி காற்றுக்கு அப்பகுதியில் பயிரிடப்பட்டு இருந்த சுமார் 5,000 ஏக்கர் வாழை முறிந்து நாசமானது.

இதை பார்த்து விவசாயிகள் கண்ணீர் விட்டனர். இது குறித்து வி.ஏ.ஓ. மற்றும் வேளாண் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து கணக்கிட்ட பிறகுதான் விவசாயிகளின் நஷ்ட கணக்கு தெரிய வரும். ஆனால் அதிகாரிகள் வர தாமதப்படுத்துவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக வறட்சியின் காரணமாக நஷ்டத்தை சந்தித்து வந்த விவசாயிகளுக்கு இது மேலும் ஒரு பேரிடியாக உள்ளது.

மேலும் அப்பகுதியில் இருந்த குடியிருப்புகளின் மேற்கூரைகளும் சூறாவளி காற்றுக்கு தூக்கி வீசப்பட்டன. இதனால் பொதுமக்களின் வீடுகளும் சேதமடைந்தன. இரவு முழுவதும் இருளில் தவித்து வந்தனர்.
Tags:    

Similar News