வேடசந்தூர் பகுதியில் இரவு நேர மின் தடையால் பொதுமக்கள் கடும் அவதி
வேடசந்தூர்:
வேடசந்தூர் அருகே உள்ள விடுதலைப்பட்டி, ரெங்கநாதபுரம், காசிபாளையம், எத்திராம் பட்டி, கல்வார் பட்டி, எல்லப்பம் பட்டி, கோவில் பட்டி, கல்லுப்பட்டி, மாங்கலா புரம் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.
சுமார் 2 முதல் 3 மணி நேரத்துக்கும் மேலாக மின்சாரம் தடைபடுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகிறார்கள். பகல் வேளையிலும் மின் தடை ஏற்படுவதால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இரவு வேளையில் மின்சாரம் இல்லாததால் திருட்டு பயம் அதிகரித்துள்ளது.
சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து காத்துக்கொள்ள 24 மணி நேரமும் மின் விசிறியில் இருக்க வேண்டிய நிலை உள்ளது. இத்தகைய வேளையில் மின்சாரம் தடைபடுவதால் போதுமான காற்றோட்டமின்றி குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை தூக்க மின்றி அவதிப்படுகின்றனர்.
மேலும் மின் தடையினால் குடிநீர் வினியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே சீரான மின் வினியோகம் செய்ய மின் வாரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.