செய்திகள்

லாஸ்பேட்டையில் நடந்து சென்ற பெண்ணிடம் ரூ.2 லட்சம் நகை பறிப்பு

Published On 2019-05-11 09:28 GMT   |   Update On 2019-05-11 09:28 GMT
லாஸ்பேட்டையில் நடந்து சென்ற பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ரூ.2 லட்சம் மதிப்புள்ள நகையை பறித்து சென்று விட்டார்.
புதுச்சேரி:

புதுவை லாஸ்பேட்டை அசோக் நகர் பாரதிதாசன் வீதியை சேர்ந்தவர் மகிமைதாஸ். ஓய்வு பெற்ற ரோடியர் மில் தொழிலாளி. இவரது மனைவி ரத்தினம் (வயது 65). இவர் முத்தியால் பேட்டை பாரதிதாசன் அரசு பெண்கள் கல்லூரியில் உதவியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

ரத்தினம் தனது கணவருடன் தாகூர் நகரில் உள்ள தேவாலயத்துக்கு அவ்வப்போது சென்று பிரார்த்தனை செய்து விட்டு வருவது வழக்கம். ஆனால், நேற்று மகிமைதாஸ் வெளியே சென்று விட்டதால் ரத்தினம் மட்டும் தேவாலயத்துக்கு சென்றார். பின்னர் பிரார்த்தனை செய்து விட்டு மாலையில் வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.

அசோக்நகர் பாரதியார் வீதியில் வந்து கொண்டு இருந்தபோது, பின்னால் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த ஒரு வாலிபர் திடீரென ரத்தினம் கழுத்தில் அணிந்திருந்த 9 பவுன் செயினை பறித்தான். ரத்தினம் திருடன்... திருடன் என்று அலறுவதற்குள் செயினுடன் அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டார். பறிபோன தங்க செயினின் மொத்த மதிப்பு ரூ.2 லட்சமாகும்.

செயினை பறிகொடுத்த ரத்தினம் இதுகுறித்து லாஸ்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து செயினை பறித்து சென்ற மர்ம நபரை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

எப்போதும் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள இந்த பகுதியில் பெண்ணிடம் மர்மநபர் துணிகரமாக நகையை பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News