செய்திகள்

திருப்பத்தூர் அருகே வீடு புகுந்து 75 பவுன் கொள்ளை

Published On 2019-05-02 12:58 GMT   |   Update On 2019-05-02 12:58 GMT
வீடு புகுந்து 75 பவுன் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருப்பத்தூர்:

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள காரையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரஜினி. வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர், சில ஆண்டுகளுக்கு முன்பு ஊருக்கு திரும்பினார்.

நேற்று உறவினர் ஒருவரின் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ரஜினி, தனது மனைவி பிரியாவுடன் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்று விட்டார்.

இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

பின்னர் பீரோவை உடைத்த அவர்கள் அதில் இருந்த 75 பவுன் நகை, ரூ.5 ஆயிரம் ரொக்கம் ஆகிய வற்றை திருடிக் கொண்டு தப்பினர்.

துக்க நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு இரவு வீடு திரும்பிய ரஜினி கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது நகை, பணம் கொள்ளை போயிருந்தது.

இது குறித்து கண்டவராயன் பட்டி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. துணை சூப்பிரண்டு அண்ணாத்துரை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்களும் சேகரிக்கப்பட்டன. மோப்ப நாய் லைக்கா மூலம் சோதனை நடத்தப்பட்டது. அப்போது அந்த நாய் வீட்டில் இருந்து அருகில் உள்ள தோப்பு வரை சென்று நின்றது.

நகை திருட்டு தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News